கோடையில் பசுந்தீவன உற்பத்திக்கு நூறு சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம்

ஓமலூர், மார்ச் 20:  கோடை காலத்தில், பசுந்தீவனத்தின் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெளிப்புநீர் பாசன கருவிகளை சிறுகுறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் வழங்கி வருகின்றனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டார கிராமங்களில், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், வட்டார வேளாண் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் சிறுகுறு விவசாயிகள் பசும் தீவனம் மற்றும் காய்கறிகள் வளர்ப்பை ஊக்குவிக்க விவசாயிகளை தேர்வு செய்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

கோடையில் குறைந்தளவு தண்ணீரை கொண்டு தீவன உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, பாரத பிரதமரின் நுண்ணீர் பசன திட்டத்தின் மூலம் தண்ணீர் தெளிப்பு கருவிகளை நூறு சதவீத மானியத்தில் பஞ்சுகாளிபட்டி, திண்டமங்கலம், மாரமங்கலம், தொளசம்பட்டி, செட்டிபட்டி, பெரியேரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிறுகுறு விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20,865 ரூபாய் மதிப்புள்ள ஒரு செட் தெளிப்புநீர் கருவிகள் நூறு சதவீத மானியத்தில் வாங்கியுள்ளனர்.

இந்த தெளிப்பு நீர் பாசன கருவிகளை, விவசாயிகள் ஓமலூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்புகொண்டு பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பசும் தீவனம் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை, சேலம் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். கருவிகள் செயல்பாடு, அதிகாரிகளின் பணிகள், விவசாயிகள் தேர்வு குறித்து ஆய்வு செய்தார். இது குறித்து விபரம் வேண்டுவோர் மாவட்ட வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: