நாமக்கல், மார்ச் 20: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து, துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, ப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியன், துப்புரவு அலுவலர் சுகவனம் ஆகியோர், நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தொடக்கூடிய கதவு, குடிநீர் குழாய், நாற்காலி, தரைத்தளம் ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும் எனவும், துப்புரவு பணியாளர்கள் முக கவசம், கையுறை, தலையுறை ஆகியவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
ராசிபுரம்: ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்சியில் நகர வங்கி தலைவர் பாலசுப்ரமணியன், இணைப்பதிவாளர் பாலசுப்ரமணியன் மற்றும் வங்கியின் துணைத்தலைவர், இயக்குனர்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரசை முழுமையாக அழிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இலாகிஜான், பரமத்திவேலூர் தாசில்தார் செல்வராஜ் ஆகியோர் தலைமையில், உதவி மருத்துவர் விவேகப்பிரியா மற்றும் வருவாய்துறையினர், நாமக்கல் மாவட்ட நுழைவு வாயிலான பரமத்திவேலூர் சோதனை சாவடியில் முகாம் அமைத்தனர். வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி, கிருமி நாசினி மருந்து தெளித்தனர். மேலும் பயணிகள் மற்றும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில், டவுன் பஞ்சாயத்து சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.