தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரியில் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், ஜவுளி பூங்கா திட்டம் 13ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. விரைவில் அமையவுள்ள சிப்காட்டில் ஜவுளி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் தொழில்வளம் மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளது. இங்கு வேலைவாய்ப்பு தரும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேலை தேடி, பெங்களூர், திருப்பூர், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில், ஆயத்தாடை வடிவமைப்பு மையம் தொடங்கப்பட்டது. பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு ஏற்படுத்தவே இந்த ஆயத்தாடை வடிவமைப்பு மையம் தொடங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டில் 6 ஆயிரம் பேருக்கு தையல் மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் பயிற்சி முடித்த 4 ஆயிரம் பேருக்கு உடனே வேலை கிடைத்துள்ளது. இதில் 700 பேர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடை ஆர்டரின் பேரில் தைத்து வழங்குகின்றனர். இதில் பெரும்பாலும் இலவசமாக பயிற்சி பெற்றவர்களாக உளள்னர். பயிற்சிக்கான கட்டணம் செலுத்தி படித்தால் 6 மாதம், ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு திருப்பூர், கோவை, பெங்களூர் போன்ற நகரங்களில் ₹10 ஆயிரம் முதல் மாத சம்பளம்  பெற முடியும். தர்மபுரியில் சொந்தமாக கார்மெண்ட்ஸ் தொழில் தொடங்கலாம். இந்த ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்தில், பயிற்சி பெற தர்மபுரி மாவட்ட மக்களிடையே போதி விழிப்புணர்வு இல்லை. பாடத்திற்கான கட்டணம் செலுத்தி படித்தால் அதிக பயிற்சி பெற்று, சொந்தமாக கார்மெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்த முடியும். பேஷன் டிசைனர், பேட்டன் மாஸ்டர், எக்ஸ்கூட்டிவ் தையல் லைன் பயிற்சி, வணிகரீதியான தையல் பயிற்சி, தையல் மெஷின் பராமரிப்பு உள்ளிட்ட 15 விதமான செயல்முறையுடன் கூடிய பயிற்சி பாடங்கள் நடத்தப்படுகின்றன. முன்னாள் பாமக எம்பி டாக்டர் செந்தில், தர்மபுரி எம்பியாக இந்தபோது, ஜவுளிப்பூங்கா (அப்பரேல்ஸ் பார்க்) அமைக்க ஏற்பாடு செய்தார். அதற்காக தர்மபுரி அருகே 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கார்மெண்ட் நிறுவனங்கள் அதிகம் வரத்தொடங்கின. ஆனால் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. எதிர்காலத்தில் அமையவுள்ள தர்மபுரி சிப்காட் தொழில்பேட்டையில், இந்த ஆயத்தாடை பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆயத்த ஆடை விற்பனையாளர்கள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திருப்பூர், கோவையில் உள்ள பனியன் கம்பெனிக்கு சுமார் ஒரு லட்சம்பேர் வேலைக்கு செல்கின்றனர். தர்மபுரியில் ஜவுளிபூங்கா அமைத்தால், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தர்மபுரி வளர்ச்சி பெறும். ஜவுளிப்பூங்கா அமைக்க கூட்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. திருப்பூரில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி அருகே அமைக்கப்பட இருந்த ஜவுளிப்பூங்கா கைவிடப்பட்டது. கிடப்பில் உள்ள ஜவுளிப்பூங்காவை, தர்மபுரியில் விரைவில் அமைய உள்ள சிப்ஹாட்டில் இடம் ஒதுக்கீடு செய்து அமைக்க வேண்டும் என்றனர்.

தர்மபுரி ஆயத்தஆடை வடிவமைப்பு பயிற்சியாளர்கள் கூறுகையில், தர்மபுரி நகரத்திற்குள் ஆயத்த ஆடை வடிவமைப்பு மையம் மாற்றப்பட்டு, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஆயத்த ஆடைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி ஜவுளிப்பூங்கா அமைத்தால் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஆயத்த ஆடை பற்றி படிக்கவும் இளைஞர்கள், பெண்கள் அதிகம் வருவார்கள். தற்போதைக்கு ஆடை வடிவமைப்பு மையத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: