சேலம், மார்ச் 20: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள், ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 168 ரயில்களின் 300க்கும் மேற்பட்ட சேவைகளை ரத்து செய்யப்படுள்ளன. இந்த ரயில்கள் 20ம் தேதி(இன்று முதல்) 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் சேலம் வழியாக செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்(12243) ரயில் இன்று(20ம் தேதி), 21,22,23,25,26,27,28,29 மற்றும் 30ம் தேதி இயக்கப்படும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்(12244) ரயிலின் சேவை 30ம்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.