தர்மபுரி, மார்ச் 20: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து சரிந்துள்ளது. தர்மபுரி நகரில் பட்டுவளர்ச்சித்துறை சார்பில், தர்மபுரி நகரில் பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது பட்டுக்கூடுகளை கொண்டு வந்து தினமும் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். தினமும் 3 டன் முதல் 6 டன் வரை பட்டுக்கூடுகள் வரத்து இருக்கும். இந்நிலையில் சீனாவில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய், தற்போது இந்தியாவில் தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இதையொட்டி, நேற்று தர்மபுரி பட்டுகூடு ஏல அங்காடியில், வழக்கத்தை விட குறைவாக 23 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 2,165 கிலோ பட்டுகூடு வரத்து இருந்தது. வெண்பட்டுக்கூடு அதிகபட்சமாக கிலோ ₹360, சராசரி விலை ₹335 ஆகவும், குறைந்தபட்சமாக 272ஆக இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தர்மபுரி பட்டுக்குகூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்ததோடு விலையிலும் சரிவு ஏற்பட்டது.