மீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மரக்காணம், மார்ச் 20: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள இடத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம், வசவன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம், மண்டவாய் புதுக்குப்பம், பனிச்சமேடுகுப்பம், அனுமந்தைகுப்பம், செட்டிநகர்குப்பம், நொச்சிக்குப்பம், கூனிமேடுகுப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீனவர் கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் வசிக்கின்றனர். இதில் 1,013 மீனவர்கள் பைபர் போட் படகுகளையும், 15 மீனவர்கள் விசைப்படகுகளையும், மற்ற மீனவர்கள் கட்டுமரங்களை பயன்படுத்தியும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு மீன்பிடி துறைமுகம் இல்லை. இதனால் இங்குள்ள மீனவர்கள் அவர்களது படகுகளை கடற்கரையோரமே நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோல் கடற்கரையோரம் பாதுகாப்பு இல்லாமல் விசைப்படகுகளை நிறுத்தி வைப்பதால் கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் இழுத்துச் செல்வதால் மீனவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பங்கிங்காம் கால்வாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் மரக்காணம் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் பல கோடி மதிப்பில் சுமார் 15  ஏக்கர் பரப்பளவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கடந்த 6 மாதத்துக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதற்கான முதல்கட்ட வேலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள இடத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு அதற்கான வரைபடங்களையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மரக்காணம் வட்டாட்சியர் ஞானம், மீன் வளத்துறை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் சின்னகுப்பன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: