திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

உளுந்தூர்பேட்டை, மார்ச் 20: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் கனகசபை (29). இவருக்கு விழுப்புரம் அருகே பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் மகள் சுகன்யா (23) என்பவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதில் சுகன்யாவின் பெற்றோர் திருமணத்தின்போது 11 பவுன் நகை, பீரோ, கட்டில், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக கொடுத்ததாக

கூறப்படுகிறது. கனகசபை சென்னையில் வெல்டிங் வேலை செய்து வருவதால் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் சுகன்யாவின் தந்தை முனியப்பன் புகார் செய்தார். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இன்ஸ்பெக்டர் விஜி  மற்றும் போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  திருமணமான 3 மாதத்திற்குள் இளம்பெண் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வரதட்சணை கொடுமையால் சுகன்யா தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜிகுமார் ஆகியோர் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: