புதுச்சேரி, மார்ச் 20: சென்னையை சேர்ந்த புது மாப்பிள்ளை புதுச்சேரியில் அறை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதாக எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மகன் மதன் (23). இவருக்கும், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே மதன் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். இதற்காக ரெட்டியார்பாளையத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை தனது நண்பர் ஒருவரின் திருமணம் நடைபெறுவதாகவும், அதற்காக காலையில் குளிரில் எழுந்து செல்ல முடியாது, இதனால் புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகில் தனது நண்பர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்துவிட்டு காலையில் திருமணத்திற்கு சென்றுவிடுவதாகவும் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் மட்டும் நேற்று முன்தினம் இரவு உருளையன்பேட்டையில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் மதன் லாட்ஜ் அறையில் இருந்து வெளியே வரவில்லை.