திருப்பூர், மார்ச் 20: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் திமுகவினர் மாநகராட்சி வாகனத்தை நேற்று சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 427 கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிக்கடை, உணவகம், மளிகை கடை, இலை கடைகள், பூக்கடைகள், கறிக்கடைகள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை எளிதில் வாங்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டை இடித்து புதிய கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று திருப்பூர் மாநகராட்சி சார்பில் கடைகளை இடிப்பதற்கு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்படிருந்தது. இதை பார்த்து மார்க்கெட் பகுதியில் ஒன்று திரண்ட வியாபாரிகள் மற்றும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், டிகேடி நாகராஜ், ராஜ்மோகன் ஆகியோர் ஒன்றிணைந்து மாநகராட்சி வாகனங்களை சிறைபிடித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.