மலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்

ஊட்டி, மார்ச் 20: மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடக்கிறது.  ஆண்டு தோறும் மே மாதம் கோடை சீசனின் போது ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மலர் கண்காட்சியை தாவரவியல் பூங்காவில் நடத்தி வருகிறது. இதனை காண லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதற்காக 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு அதில் மலர்கள் பூத்து குலுங்கும். இந்த மலர் தொட்டிகள் மாடத்தில் பல்வேறு வடிவங்களில் அடுக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், புகைப்படும் எடுத்துக் கொள்வார்கள்.  இந்த நிலையில் வரும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக பூங்காவை பராமரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை பாதுகாக்கும் பணிகளும், அவைகள் சாய்ந்து முறிந்து விழாமல் இருக்க குச்சிகள் கொண்டு அனைத்து செடிகளை ஒன்றிணைத்து கயிறு மூலம் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. கோடை மழை குறித்த காலத்தில் பெய்யாத நிலையில் மலர் செடிகளுக்கு நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றும் பணிகளும் நடந்து வருகிறது.

Related Stories: