கோவை, மார்ச் 20: கோவை மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஓட்டல்கள், டீ கடைகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்ைக எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பரவமால் தடுக்க பொது சுகாதாரத்துறையுடன், அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், டீ கடைகளில் பொதுமக்கள் கை கழுவ சோப்பு, கிருமி நாசினி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தெரியும் வகையில் கொரோனா வைரஸ் பரவும் முறை, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான விழிப்புணர்வு குறித்த அறிவிப்பினை நுழைவு வாயில் மற்றும் கை கழுவும் இடங்களின் வைக்க வேண்டும். சமைக்கும் உணவுகளை நூறு சதவீதம் வேக வைத்தும், சூடாக பரிமாற வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்கள் இருக்கக் கூடாது. சுத்தம் செய்வது தொடர்பான பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும். தினமும் தரை உள்ளிட்டவற்றை 6 முறைக்கு மேல் சுத்தம் செய்ய வேண்டும்.