திருவாரூர், மார்ச் 20: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்க கோரி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினந்தோறும் வெளி நோயாளிகளாக ஆயிரக்கணக்கானோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் நோய் தொற்று காரணமாக இந்த மருத்துவமனை முழுவதும் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக தற்போது பெரும் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒப்பந்த பணியாளர்களாக துப்புரவு பணி உட்பட பல்வேறு பணிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும், முக கவசம் ,கையுறை உட்பட அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.