அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்

முத்துப்பேட்டை, மார்ச் 20: கொரோனா வைரஸ் எதிரொலியாக வாரசந்தை கிடையாது என்று அறிவித்தும் மீறி கடைகள் போட்ட வியாபாரிகளை பேரூராட்சி அதிகாரிகள் போலீசார் வைத்து அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மன்னார்குடி சாலை குமரன் பஜாரில் பேரூராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை உள்ளது. வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இந்த சந்தை நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுப் பகுதி கிராம மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அதனால் வாரத்தில் ஒருநாள் முத்துப்பேட்டையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுவது மட்டுமின்றி, கடைதெருவில் உள்ள வியாபாரிகளுக்கு அதிகளவில் வியாபாரமும் நடைபெறும்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதையடுத்து முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் வியாழன்கிழமை நடைபெறும் இந்த வாரச்சந்தை நேற்று நடைபெறாது என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், வெளியூரிலிருந்து வரும் சம்பந்தப்பட்ட வியாபாரிகளையும் தொடர்புக் கொண்டு பேரூராட்சி சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை மீறி பெரிய வியாபாரிகள் உட்பட சிறு சிறு வியாபாரிகள் வார சந்தைக்குள் சென்று கடைகளை போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அதிகாலை முதல் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் கூடினர். இதனால் அதிர்ச்சியடைந்த பேரூராட்சி பணியாளர்கள் வார சந்தைக்கு சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும்படி கூறினர். ஆனாலும் பேரூராட்சி பணியாளர்களின் பேச்சை கேட்காமல் வியாபாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர். இதனால் வியாபாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பானது. மேலும் சிறு வியாபாரிகள் பெரிய வியாபாரிகளின் கடைகளை அகற்றினால்தான் நாங்களும் அகற்றிகொள்வோம் என்றனர். இதனால் சந்தையில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி சார்பில் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்.இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பேரூராட்சியின் அறிவிப்பை மீறி கடைகளை போட்ட வியாபாரிகளை உடன் அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனையடுத்து அனைத்து வியாபாரிகளும் அவசர அவசரமாக கடைகளை காலி செய்து எடுத்து சென்றனர். இதனால் முத்துப்பேட்டையில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: