திருவண்ணாமலை, மார்ச் 20: வாகன விபத்துகளை தவிர்க்க, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், ஓட்டுநர் பழகுநர் உரிமம் வழங்குதல் போன்ற பணிகள் ேநற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், புதிய வாகனங்களை பதிவு செய்யும் பணி வழக்கம் போல நடந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 137 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையும் இனி வரும் நாட்களில் குறையும் என தெரிகிறது. இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்ததாவது: தமிழக அரசின் உத்தரவுபடி, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணி வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு வரும் நபர்களுக்கு, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.