திருச்சி, மார்ச் 19: மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் பொதுப்பணித்துறை நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பொன்னணியாறு உப வடிநிலப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் பழுதுகள் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை திருச்சி நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆய்வு செய்தார். மணப்பாறை வையம்பட்டி பகுதிகளில் 4 ஏரிகளும், 13 அணைக்கட்டுகளும், ரூ.4.85 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதை நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைசெல்வம் பார்வையிட்டு கூறியதாவது: மணப்பாறை வட்டத்தில் பொன்னணியாறு உப வடிநிலப்பகுதியில் உள்அடங்கிய பொன்னணி ஆறானது, ஒரு காட்டாறாக கடவூர் மலைப்பகுதியில் உற்பத்தியாகி, மணப்பாறை மற்றும் ரங்கம் வட்டங்களில் முதல் 16 கி.மீ. தூரத்திற்கு பொன்னணியாறாகவும், அடுத்த 16 கி.மீ. தூரத்திற்கு மாமுண்டி ஆறாகவும், கடைசி 20 கி.மீ. தூரத்திற்கு அரியாறாகவும் பயணித்து, திருச்சி தீரன்நகர் பகுதியில் கோரையாற்றில் கலக்கிறது. இந்த பொன்னணியாற்றுக்கு கண்ணூத்து ஆறு, தெற்குமலையாறு, டொம்பச்சி ஆறு மற்றும் உப்பாறு வாரி ஆகிய கிளை ஆறுகளும் இதில் கலக்கிறது. பொன்னணியாறு உப வடிநிலப் பகுதியின் கீழ் மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி, தோகைமலை, விராலிமலை வட்டாரங்களில் 40 ஹெக்டேருக்கு மேல் உள்ள 104 குளங்கள், ஏரிகள் மூலம் 7,276.52 ஹெக்டேர் பாசனவசதி பெறும் வகையிலும் 40 அணைக்கட்டுகளின் மூலம் 2,604.53 ஹெக்டேர் பாசன வசதிபெறும் வகையிலும் அமைந்துள்ளது.