கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு

தஞ்சை, மார்ச் 19: தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் சியாமளாதேவி கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கள்ளப்பெரம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த வடிவேல் மகன் கதிரவன்( 25) என்பவருக்கும் கள்ளப்பெரம்பூரை சேர்ந்த பாலையன் மகன் கோபிநாத் (22), கண்டமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஞானஒளி மகன் பிரதீபன் (25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் ஆதரவாக 10க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதில் கதிரவன் மற்றும் கோபிநாத்துக்கு ஆதரவாக வந்திருந்தவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் இருகோஷ்டியை சேர்ந்தவர்களும் அருகில் இருந்த பாட்டில், கட்டை, கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் கதிரவன் அவருடைய நண்பர் கள்ளப்பெரம்பூரை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராகுல் (20), எதிர்தரப்பை சேர்ந்த கோபிநாத், பிரதீபன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இருதரப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கோபிநாத், கதிரவன், பிரதீபன், ராகுல், வினோத், ஜீவா, தாமோதரன், செந்தில், நந்தகுமார், விஜய், சூர்யா ஆகிய 11 பேர் மீது கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: