காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து

காரைக்கால், மார்ச் 19: காரைக்காலில் கள், சாராயம், மதுபானக் கடைகளை தூய்மையை பராமரிக்காவிட்டால், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என, மாவட்ட கலால்துறை துணை ஆணையர் ஆதர்ஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து காரைக்கால் மாவட்ட கலால் துறை துணை ஆணையர் ஆதர்ஷ், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது : நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள், சாராயம், மதுக்கடைகள், பார் வசதியுடன் கூடிய கடைகளில் மேசை, நாற்காலி, வருபவர்கள் தொடக்கூடிய பகுதிகளை அவ்வப்போது தகுந்த சோப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

கடைகளில் பயன்படுத்தும் கிளாஸ் குவளைகள், கேண்டீன் பகுதி அனைத்தும் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, கேண்டீன் பகுதி சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் வகையில் சோப்பு, தண்ணீர் வசதிகளை செய்து வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். மதுக்கடைகள் குறிப்பாக பார் வசதியுடன் கூடிய மதுபான மையம், சாராயம், கள்ளுக் கடைகளில் கூட்டமாக இருக்கும் வகையிலான சூழல் கூடாது. இவற்றிலிருந்து கடை நிர்வாகத்தினர் மீறும்பட்சத்தில், எந்தவித முன்னறிவிப்புமின்றி கடையின் உரிமத்தை ரத்து செய்ய நேரிடும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனவே, அனைவரும் உரிய ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: