நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுமுறை அறிவிக்கப்பட்டும் அரசு உத்தரவை மீறும் தனியார் கல்லூரிகள்

கரூர், மார்ச் 19: கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கையாக அனைத்து கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை விட்டிருந்த நிலையில் கரூர் பஸ் நிலையத்தில் காத்திருந்த மாணவிகளை அழைத்து செல்ல தனியார் கல்லூரி பஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதுடன் பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ம்தேதி வரை விடுப்பு அறிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுபடி கரூர் மாவட்டத்தில் உள்ள 1,069 பள்ளிகள், 18 கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை கரூர் பஸ் நிலையத்தில் சீருடை அணியாத சில கல்லூரி மாணவ, மாணவிகளை அங்கு வந்த தனியார் கல்லூரி பஸ் ஒன்று அழைத்து சென்றது.

இதுகுறித்து மாணவிகள் சிலரிடம் கேட்டபோது, பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்திருந்தாலும், எங்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்கு வரச்சொல்லியதால் எங்களை அழைத்து செல்ல கல்லூரி பஸ் வந்துள்ளது என்றனர். அரசால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில், இப்படி மாணவ, மாணவிகளை கல்லூரிக்கு சிறப்பு வகுப்பு எனக்கூறி வரச் சொல்லிருப்பது குறித்து கரூர் கலெக்டர் அன்பழகனிடம் கேட்டபோது, இது குறித்து சம்மந்தப்பட்ட தனியார் கல்லூாிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: