நாகர்கோவில், மார்ச் 19: நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கைகளை துடைக்க வழங்கிய திரவத்தை முதியவர் ஒருவர் குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் நுழையும்போது அவர்கள் அனைவரும் கை கழுவ சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக பணியாளர்களின்றி பொதுமக்களும் கை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணியாளர்களால் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கை கழுவ திரவம் வழங்கப்படுவதுடன் கைகளை துடைத்துக்கொள்ளவும் திரவம் வழங்கப்படுகிறது. மேலும் கைகளை துடைத்துக்கொள்வதற்கான திரவத்தை கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைகின்ற பணியாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கலெக்டர் அலுவலக பணியாளர்கள் வழங்கினர். இதனை கையில் பெற்றுக்கொண்ட முதியவர் ஒருவர் திடீரென்று அந்த திரவத்தை குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை விநியோகம் செய்த பணியாளரே அவரை தடுத்து அதனை சாப்பிடக்கூடாது, கைகளில் துடைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.