வேலூர், மார்ச் 19: வேலூர் சின்னஅல்லாபுரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமியை கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் சின்னஅல்லாபுரம் கே.கே.நகரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், போதை வாலிபர் ஒருவர் சிறுமியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். அங்கு அந்த வாலிபருக்கு சரமாரி தர்ம அடி கொடுத்தனர். அந்த வாலிபரிடம் விசாரித்தபோது அவர் கே.கே.நகரை சேர்ந்த கே.சுரேஷ்(33) என்பதும், கட்டிடத்தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த பாகாயம் போலீசார் அந்த வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.