பல்லாவரம்: பல்லாவரம் அருகே சாலையில் திறந்த நிலையில் இருக்கும் பெரிய கிணறால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். பல்லாவரம் அடுத்த கவுல்பசார், மாங்காளியம்மன் கோவில் தெரு, விஜிஎன் சதர்ன் கார்டன் விரிவு அருகே பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பெரிய கிணறு ஒன்று உள்ளது. போதிய தடுப்பு வேலிகள் மற்றும் மூடி இல்லாமல் எந்நேரமும் திறந்த நிலையிலேயே, ஆபத்தான வகையில் இந்த கிணறு உள்ளது. மிகவும் தாழ்வாக இந்த கிணறு இருப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட ஒதுங்கும் போது, நிலை தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த சாலையில் கிணறு இருப்பதே தெரியாத காரணத்தால் எளிதில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடத்தின் அருகே இதுபோன்ற திறந்த வெளி கிணறால், அவ்வழியே செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறி உள்ளே விழும் சூழ்நிலை அதிகமாக உள்ளது.