உடுமலை, மார்ச் 19:அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க பொதுச்செயலாளர் சண்முகவேலு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மிகவும் பழமையானது. அதில் உள்ள இயந்திரங்கள் அனைத்தும் செயல்திறனை இழந்துவிட்டன. ஆலை இயக்கும்போது, இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு ஆலையை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் ஆலைக்கும், ஆலைக்கு கரும்பு கொடுக்கின்ற விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஆலையையும், கரும்பு விவசாயிகளையும் பாதுகாக்கிற வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.25.80 கோடி ஒதுக்கீடு செய்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அந்த தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அந்த தொகையை விடுவித்து ஆலையை புனரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.