பள்ளிப்பட்டு, மார்ச் 19: பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் மீது தீர்வு காண ஏதுவாக ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தனியறை அமைத்து தர வேண்டும் என்று ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கேட்டுக்கொண்டார்.ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் செலவு தொடர்பான கணக்கு விவரங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு கிராமங்களில் குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அலுவலகம் இருப்பதுபோல் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களை பொதுமக்கள் எளிதாக சந்தித்து அன்றாட பிரச்னைகள் தெரியப்படுத்தவும், தீர்வு காண ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தனியறை அமைத்து தர வேண்டும்.