குன்னூர், மார்ச் 19: குன்னூரில் பறவை காய்ச்சல் மற்றும் சிக்கன் மூலம் கொரோனா பரவி வருதாக ஏற்பட்ட வதந்திைய அடுத்து இலவசமாக பொதுமக்களுக்கு சில்லி சிக்கன் வழங்கி கோழிக்கடை உரிமையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் சிக்கன் மூலமாக பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து பொதுமக்கள் கோழிகளை வாங்குவதை நிறுத்தியுள்ளனர். இதனால் கோழியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூர் வி.பி தெருவில் கோழி கடை வியாபாரிகள் 100 கிலோ சிக்கனை கொண்டு சில்லி சிக்கனை தயாரித்து இலவசமாக வழங்கி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் கோழி சாப்பிடுவதால் வராது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி உண்டு சென்றனர்.