உத்திரமேரூர், மார்ச் 19: உத்திரமேரூர் பேரூராட்சியில் உத்திரமேரூர் பஸ் நிலையம், காவல் நிலையம், நீதிமன்றம், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மருத்துவமனை உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.மேலும் பொது மக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது. அதில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். முதியோர், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிக தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. பொது மக்கள் வெளியில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் அவசியம்.விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக விளையாடுவதை, பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தினமும் சுமார் 20 முறை கைகளை கழுவ வேண்டும், காய்ச்சல் உள்ளிட்ட நோய்கான அறிகுறி இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.