தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 19: தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள், வரும் ஜூன் 3ம் தேதி துவங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.in.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து, தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, அங்கேயே தேர்வு கட்டணத்தையும் செலுத்த தேர்வரே நேரில் செல்ல வேண்டும். தேர்வு கட்டணமான ஒவ்வொரு பாடத்திற்கும் 50, முதலாமாண்டு, இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு 100, பதிவு மற்றும் சேவைக் கட்டணமாக 15, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக 50 செலுத்த வேண்டும். தகுதியற்றவர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால் வழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: