பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு சேலம் நீதிமன்ற பெண் ஊழியருக்கு முன்ஜாமீன்

சேலம், மார்ச் 19: பிரதமர் மோடிக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட பெண் ஊழியருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் பரிமளா. சேலம் நீதிமன்ற ஊழியரான இவர், முகநூலில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். அப்புகாரில், ‘‘பிரதமர் மோடி கதையை முடிங்கப்பா, இன்னும் 5 வருடம் இருந்தா, இந்தியா அப்படியே 50 வருடம் பின்னாடி போயிடும். மனித வெடிகுண்டு வேண்டும் என்றால் சொல்லுங்க, நான் வருகிறேன்’’ என அவர் கூறியிருந்ததாக புகாரில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பரிமளா மீது, மற்றவர்களை குற்றம் செய்ய தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் தகவல் பரப்பியதாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பரிமளா, முன்ஜாமீன்கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சேலம் முதலாவது  கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், பரிமளாவுக்கு சாட்சிகளை கலைக்க கூடாது என நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டுமானால் காலை 9 மணி முதல் 8 மணி வரையில் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: