குடியாத்தம், மார்ச் 18: குடியாத்தத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் பரப்பிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதனால் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கங்களும் மூடப்பட்டு, எந்தவித நிகழ்ச்சியும் நடத்த கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், இதனை குடியாத்தம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதி செய்ததாக, தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைபோல் சித்தரித்து 2 இளைஞர்களின் புகைப்படத்துடன் வீடியோ தயாரித்து, வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் சிலர் ஷேர் செய்துள்ளனர்.