திருவண்ணாமலை, மார்ச் 18: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சார தொழிலாளர்கள் 8,628 பயனாளிகளுக்கு ₹1.36 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து, தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில்குமரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் 8,628 பயனாளிகளுக்கு ₹1.36 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். நலவாரியங்களில் 2015ம் ஆண்டு பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்தவர்கள் தற்போது 2020ல் தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மேலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள், கடை மற்றும் ஓட்டல் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகப்படியான தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.