எச்சில் தொட்டு ரூபாயை எண்ணுவதால் எளிதில் பரவும் வங்கி நிர்வாகம் கவனிக்குமா?

சின்னாளபட்டி: கொரோனா பரவலை தடுக்க கூட்டமான இடங்களை மக்கள் தவிர்க்குமாறு, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதவிர அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை கைகளை சுத்தம் செய்யச்சொல்லி, அதன்பின்னரே அலுவலகத்திற்குள் வருமாறு அறிவிப்பு பலகைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

நாள்தோறும் வங்கிக்கு வரும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள், முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் ஊழியர்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பெரும்பாலானோர் ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எச்சில் தொட்டுத்தான் எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணிய பணங்களை ஊழியர் தொடும்போது எளிதாக பரவி விடும்.

எனவே, சின்னாளபட்டி பகுதி உட்பட மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வங்கிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சோப், சானிடைசரை கொண்டு, கைகளை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சின்னாளபட்டி கனரா வங்கி கிளை மேலாளர் மணிமோகனிடம் கேட்டபோது, ‘‘எங்களுக்கு இப்பொழுதான் சர்க்குலர் வந்துள்ளது. அதில் வங்கியை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் ஊழியர்களை அடிக்கடி கைகளை சுத்தம் செய்யச்சொல்லுங்கள் என உத்தரவு வந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவிப்பு வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: