பண்ருட்டி அருகே விவசாயிக்கு கத்திக்குத்து

பண்ருட்டி, பிப். 26: பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி உருட்டுக்கட்டையால் தாக்கிய சம்பவத்தில் அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50), விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திவேல் மகன் மணி (எ) மணிகண்டன் என்பவருக்கும் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன், அவரது மனைவி சுமதி ஆகியோர் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அப்போது மணி, அவரது தம்பி அஜய், தாயார் ஆரவல்லி ஆகிய 3 பேரும் ராமச்சந்திரனிடம், எங்களை ஏன் திட்டுகிறீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் எனது மனைவியைத்தான் திட்டினேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத மணி தரப்பினர், ராமச்சந்திரனை அசிங்கமாக திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அவரது மனைவி சுமதி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவ்வாது உசேன் மற்றும் போலீசார், மணி, அவரது தம்பி அஜய், தாயார் ஆரவல்லி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து மணி (20), அஜய் (18) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: