உளுந்தூர்பேட்டை, பிப். 26: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கருவேப்பிளைப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு மின் கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின்சார ஒயர்கள் தெருக்களில் செல்லும் போது அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மேல் பகுதியில் செல்வதால் வீடுகளில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகள் தங்களது வீட்டின் மாடிக்கு செல்வதற்கே அச்சம் அடைந்து வருகின்றனர். மிகவும் தாழ்வாக செல்லும் இந்த மின்சார ஒயர்களினால் மின்சாரம் தாக்கி பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது மட்டுமின்றி காற்று வேகமாக வீசும் போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின்பொறிகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதால் அருகில் உள்ள கூரை வீடுகளில் வசிப்பவர்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.