திருக்கோவிலூர், பிப். 26: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ராஜா முன்னிலை வகித்தார். உதவி அலுவலர் மகாதேவன் வரவேற்றார். விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் வேளாண் இடுபொருட்கள், உரம், பூச்சி கொல்லி மருந்துகள் வாங்கவும் மற்றும் உற்பத்திக்கு தேவையான நிதி உதவி பெறவும் முடியும்.