பெரம்பலூர், பிப்.25: வெங்காயம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் போதிய விலையின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பல்லாரி வெங்காயம் வடமாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பல்லாரி வெங்காயத்தின் பயன்பாடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. மருத்துவ குணம் கொண்ட சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைத்தான் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். திருமணம், கோயில் விழாக்கள், உணவு விடுதிகளில் பல்லாரிவெங்காயம் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னவெங்காயம் அதிகளவில் பயிரிட்டனர். விளைச்சல் நன்றாக இருந்தும் போதுமான விலை கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு கடும் கிராக்கியாக விற்பனையான தற்போது விலை குறைந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மார்க்கெட்டில் விற்கும் விலையே இவ்வளவு குறைவாக இருப்பதால் மொத்தமாக சாகுபடி செய்யும் இடத்திலேயே மொத்த வியாபாரிகள் வாங்கும் விலை இன்னும் குறைவாக உள்ளது. இதனால் போதிய விலையின்றி விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். வெங்காயம் அதிக விலை விற்றபோது சமூக வலைத்தளங்களில் தங்கத்திற்கு இணையாக குறிப்பிட்டு தகவல்கள் வந்தன. தற்போது தங்கம் விலை கடுமையாக உயரும் நிலையில் வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.40ஆகவும், கடைகளில் ரூ.50எனவும் விற்பனை செய்யப்பட்டது. பல்லாரி வெங்காயம் வரத்து அதிகம் காரணமாக கிலோ ரூ.35 என உழவர்சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. கடைகளில் ரூ.45வரை கிடைக்கிறது. சந்தையில் விலை உயர்ந்திருந்தாலும் உற்பத்தி செய்யும் தங்களுக்கு கிலோவுக்கு ரூ.10முதல் 15 வரையே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். போதுமான விலை கிடைக்க கூட்டுறவு துறையில் வேளாண் வணிகத்துறை சார்பில் வெங்காயம் விற்பனை சந்தை ஏற்படுத்த வேண்டும், இதனால் ஓரளவுக்கு கட்டுப்படியான விலை தங்களுக்கு கிடைக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.