நாகை,பிப்.25: நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள அரசு வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள வளாகத்தில் கோர்ட், தாசில்தார் அலுவலகம், அரசுடமையாக்கப்பட்ட வங்கி கிளை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, போலீசாரின் தகவல் பரிமாற்றம் செய்யும் அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை என்று அரசு சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்துவோர்கள் தங்களுக்கு புகலிடமாக மாற்றி வருகின்றனர். அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிவறையில் இரவு நேரங்களில் சில விரும்பதகாத செயல்களும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.