காரைக்கால், பிப். 25: காரை க்கால் அம்மையார் கலையரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்ற சங்கீத மும்மூர்த்திகளின் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் கலையரங்கில் காரைக்கால் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 27ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகளின் ஆராதனை விழாவில், நாகூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் கோஷ்டியார் உஞ்ச விருத்தி நிகழ்ச்சியும், நாம சங்கீர்த்தனமும், காரைக்கால் முருகானந்தம், சிதம்பரம் துளசிராமன் மங்கள இசை, நாதசுரமும், சீர்காழி முருகேசன், வெங்கடேசன் ஆகியோரின் சிறப்பு தவில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு காரைக்கால் அனைத்து முன்னணி சங்கீத வித்துவான்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்ட பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து மத் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை தனியார் சங்கீத வித்யாலயா மாணவ, மாணவிகளின் சிறப்பு இசை ஆராதனை மற்றும் ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற்றது.