பழைய - புதிய பஸ் நிலையம் இடையே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இயக்க வேண்டும்

தூத்துக்குடி, பிப். 25: தூத்துக்குடியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் இடையே நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டருக்கு  மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ் அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடி மாநகரில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடியில் உள்ள பழைய, புதிய பேருந்து நிலையங்களுக்கு பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக பழைய பஸ் நிலையம் - புதிய பஸ் நிலையம் இடையே இயங்கி வந்த அரசு நகர பேருந்து எவ்வித காரணமும் இன்றி இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மினிபஸ்கள் மட்டுமே இந்த வழியில் இயங்கி வருகிறது. அரசு நகர பேருந்து ஒன்றுகூட இந்த வழித்தடத்தில் இயங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், பேருந்து இலவச பயண அனுமதி அட்டை உள்ள மாணவர்கள் அரசு பஸ்சில் மட்டுமே தங்களது பயண அனுமதி அட்டையை பயன்படுத்த முடியும். தற்போது இந்த தடத்தில் அரசு பஸ் இயங்காததால் இவர்கள் அனைவரும் காசு கொடுத்து தனியார் பஸ்சில் பயணிக்கும் அவலம் உள்ளது. எனவே பொதுமக்கள், பயணிகள், மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், மாணவர்கள் நலன் கருதி 10 நிமிடத்திற்கு ஒரு அரசு டவுன் பஸ்சை ரூ.5 கட்டணத்தில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories: