வி.கே.புரம், பிப்.25: பாபநாசம் கோரையாறு பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.
வி.கே.புரம் டாணா பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன் (65). விவசாயியான இவருக்கு பாபநாசம் கோரையாறு ஆற்று பகுதியான அனவன்குடியிருப்பு பகுதியில் தென்னந்தோப்பும் வயலும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இவரது தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துள்ளன. அப்போது வயலில் பணியில் ஈடுபட்டிருந்த சுப்பிரமணியன் யானைகளை கண்டதும் வெடி வெடித்தும், சைலன்சரை எடுத்து விட்டு டிராக்டரை இயக்கி சப்தம் எழுப்பியும் யானைகளை விரட்டி உள்ளார். தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் சோலார் மின்வேலிகளையும் உடைத்துள்ளன. இவர் துணிச்சலாக யானைகளை விரட்டியதால் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தப்பியது.