ஊட்டி, பிப். 25: ஊட்டி கேரட் தட்டுப்பாட்டை போக்க மேட்டுப்பாளையம் சந்தைகளுக்கு டெல்லி கேரட் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஊட்டி கேரட் விலையும் குறைய வாய்ப்புள்ளது. ஊட்டி கேரட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நல்ல விலை கிடைத்து வந்தது. கிலோ ஒன்று ரூ.50 முதல் 80 வரை விலை போனது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் கேரட் விலை உச்சத்தில் இருந்ததால், அதிக லாபம் கிடைத்து வந்தது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் மற்ற பயிர்களை பயிர் செய்வதை விட இம்முறை கேரட் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். பொதுவாக, நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை ஊட்டி கேரட் விளைச்சல் குறையும். இச்சமயங்களில் கொடைக்கானல், கர்நாடகம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் கேரட் ஊட்டி கேரட்டின் தட்டுப்பாட்டை சரி செய்யும். ஆனால், இம்முறை முதன் முறையாக ஊட்டி கேரட் தட்டுப்பட்டை போக்க தற்போது வியாபாரிகள் பலர் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு டெல்லி கேரட்டை இறக்குமதி செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 டன் வரையில் இந்த கேரட் இறக்குமதி செய்யப்படுகிறதாம்.