மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி

மேலூர், பிப். 25: மேலூர் அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றனர். மதுரை ஒஎம்சிஏ மற்றும் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 11வயது பிரிவில் மேலூர் அ.செட்டியார்பட்டி ஒன்றிய பள்ளி 5ம் வகுப்பு மாணவி சோலையம்மாள் மற்றும் 13 வயது பிரிவில் அ.வல்லாளபட்டி மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவர் தேவ்நாத் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.

ஆறுதல் பரிசுகளை அ.செட்டியார்பட்டி பள்ளி மாணவர்கள் தமிழ்நிலவன், ஞானகுரு, தமிழரசி ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியரும், பயிற்சியாளருமான செந்தில்குமார் பயிற்சி அளித்திருந்தார்.

இவர்களை அ.வல்லாளபட்டி பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வரவேற்றனர்.

Related Stories: