தொண்டி, பிப்.25: தொண்டியில் டூவீலரில் பறக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விதிகளை மீறி வேகமாக செல்லும் இவர்களை போலீசார் தடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தொண்டி பகுதியில் டூவீலர்களில் சக நண்பர்கள் பலரை ஏற்றிக் கொண்டு சிறுவர்கள் அச்சமின்றி வேகமாக பறந்து செல்கின்றனர். நகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் இவர்களால் பாதசாரிகள் உள்ளிட்ட பலரும் அவதியடைகின்றனர். சாதாரணமாக டூவீலர் ஓட்ட 18 வயது இருக்க வேண்டும். ஆனால் டூவீலர் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இரண்டு நபர்களுக்கு மேல் டூவீலரில் செல்ல கூடாது. ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை டூவீலரில் கொண்டு செல்ல கூடாது என பல விதிமுறைகள் இருந்தாலும் அவற்றை காற்றில் பறக்க விட்டு காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை டூவீலர்களில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்களே டூவீலர்களை சிறுவர்கள், சிறுமிகள் ஓட்ட அனுமதிக்கின்றனர்.