சாலை விதிகளை மீறி டூவீலர்களில் சிறுவர்கள் அதிவேக பயணம் நடவடிக்கை எடுக்காத போலீசார்

தொண்டி, பிப்.25: தொண்டியில் டூவீலரில் பறக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விதிகளை மீறி வேகமாக செல்லும் இவர்களை போலீசார் தடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தொண்டி பகுதியில் டூவீலர்களில் சக நண்பர்கள் பலரை ஏற்றிக் கொண்டு சிறுவர்கள் அச்சமின்றி வேகமாக பறந்து செல்கின்றனர். நகரில் போக்குவரத்து  மிகுந்த சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் இவர்களால் பாதசாரிகள் உள்ளிட்ட பலரும் அவதியடைகின்றனர். சாதாரணமாக டூவீலர் ஓட்ட 18 வயது இருக்க வேண்டும். ஆனால் டூவீலர் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இரண்டு நபர்களுக்கு மேல் டூவீலரில் செல்ல கூடாது. ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை டூவீலரில் கொண்டு செல்ல கூடாது என பல விதிமுறைகள் இருந்தாலும் அவற்றை காற்றில் பறக்க விட்டு காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை டூவீலர்களில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்களே டூவீலர்களை சிறுவர்கள், சிறுமிகள் ஓட்ட அனுமதிக்கின்றனர்.

அருகேயுள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்க, பஸ் ஸ்டாண்டில் உறவினர்களை இறக்கி விட என பல விஷயத்திற்கும் டூவீலரை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். இதில் பெரும்பாலான சிறுவர்கள் கியர் இல்லாத டூவீலரை ஓட்டுகின்றனர். பள்ளி மாணவர்கள் சிலர் கியர் வண்டிகளையே பயமின்றியும், ஹெல்மெட் போடாமலும் வேகமாக ஓட்டி செல்கின்றனர். சில மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலர்களை எடுத்து வந்து, அதை பள்ளியின் அருகே நிறுத்தி விட்டு பள்ளி முடிந்ததும் எடுத்துச் செல்கின்றனர். இதை போலீசாரும் தினந்தோறும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இனிமேலாவது சிறுவர்கள் டூவீலர்களில் வந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து பெற்றோர்களை அழைத்துவர சொல்லி, அவர்களை கண்டித்தால் மட்டுமே இதை தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: