தேவதானப்பட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு கொலையா என போலீசார் விசாரணை

தேவதானப்பட்டி, பிப். 24: தேவதானப்பட்டியில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள வாய்க்காலில், அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டியில் உள்ள வைகை அணை சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகம் வழியாக,மஞ்சளாறு அணை புதிய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் அருகே குடியிருப்பவர்கள் குளிப்பர்.நேற்று முன்தினம் இந்த வாய்க்காலுக்கு சிலர் குளிக்கச் சென்றனர். அப்போது வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அழுகிய ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து அவர்கள் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்து வாய்க்காலில் போட்டனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: