இபிஎஸ், ஓபிஎஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்

புதுச்சேரி, பிப். 25:  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோகுலகிருஷ்ணன் எம்பி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர் எம்எல்ஏ, வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கட்சி கொடியேற்றி, எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும், மாணவர்களுக்கு லேப்டாப், தொழிலாளர்களுக்கு தட்டு வண்டி, ரிக்ஷா, ஆதரவற்ற பெண்களுக்கு கிரைண்டர், மிக்சி, கேஸ் அடுப்பு, மின் அடுப்பு, ரைஸ் குக்கர், தையல் இயந்திரம், ஏழை மக்களுக்கு இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் அன்பழகன் எம்எல்ஏ பேசியதாவது: ஜெயலலிதா வழியில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தமிழக அரசையும், கட்சியையும் காத்து ஏழைகளும், விவசாயிகளும் ஏற்றம் பெரும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர். புதுச்சேரி காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிவிப்பு மட்டுமின்றி, சட்டமன்ற அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. இதனால் புதுச்சேரி மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உணர்ந்து புதுச்சேரியில் அதிமுக ஆட்சியை கொண்டுவர அனைவரும் உறுதியேற்று, கழக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: