ஜமுனாமரத்தூர் அருகே தார்சாலை போட்டு 40 நாளில் மண் சாலையான அவலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

போளூர், பிப்.25: ஜமுனாமரத்தூர் அருகே தார்சாலை போட்டு 40 நாளில் மண் சாலையாக மாறியதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜவ்வாதுமலை ஒன்றியம் கலசபாக்கம் தொகுதியில் உள்ளது. இந்நிலையில், ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லகொல்லை முதல் குட்டக்கரை வரை செல்லும் சாலை மண்சாலையாக உள்ளது. இந்த சாலை வழியே பாதிரி, பெரியவல்லி, குட்டக்கரை, மேல்கொல்லை, சீங்காடு, பல்லகொல்லை, பட்டங்கோவிலுர், மஞ்சூர்த்தி உட்பட 8 கிராமங்கள் உள்ளன.இந்த 8 கிராமங்கள் 15 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கல்லகொல்லை முதல் குட்டக்கரை செல்லும் 16 கிலோ மீட்டர் மண் சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் மட்டும் தார்சாலை போடப்பட்டது. ஆனால், சரியான முறையில் சாலை போடாததால் 40 நாளில் தார்சாலை பெயர்ந்து மீண்டும் மண் சாலையாக மாறியது.

இதனால், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலனை கருத்தி கொண்டு சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.அதேபோல், மீதமுள்ள சாலைகளையும் தார்சாலையாக மாற்றி பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: