திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலையில் நடைபெறும் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு உடற்தகுதி பயிற்சி முகாமை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் சார்பில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில், ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஏப்ரல் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.அதில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொது பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணிகளுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, பதினேழரை முதல் 23 வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க முடியும்.