வேலூர், பிப்.25: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன முறையில் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதனால் அங்கிருந்த திருவண்ணாமலை, ஆரணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நேற்றுமுன்தினம் முதல் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்போது தினமும் சுமார் 180 பஸ்கள் வந்து செல்கிறது. இதனால் பஸ்கள், பயணிகளுக்கு போதிய இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள தரைக்கடைகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 10 அடி இடத்தை ஆக்கிரமித்து மேற்கூரைகளை அமைத்தது கடைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று மாநகராட்சி 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் கடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் அகற்றி தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது’ என்றனர்.