நாகர்கோவில், பிப்.25: கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் நோன்பு தொடங்குகிறார்கள். கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். அதன்படி நாளை (26ம் தேதி) கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும். சாம்பல் புதன் வழிபாட்டின்போது ஆயர், பங்குத்தந்தையர்கள், அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, “மனந்திரும்பு, நற்செய்தியை நம்பு” என்று கூறுவார்கள். இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின்போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து சாம்பல் தயாரிப்பார்கள். சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும். சீரோ மலபார், சால்வேஷன் ஆர்மி உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சாம்பல் புதன் நிகழ்ச்சி நடைபெறும்.