லாரி மீது பைக் மோதி விபத்து தங்கை கண்முன் அண்ணன் பலி

ஆவடி, பிப்.25: ஆவடி அருகே கொள்ளுமேட்டில் லாரியின் பக்கவாட்டில் மீது பைக் மோதியதில் தங்கை கண் முன் அண்ணன்  பரிதாபமாக பலியானார்.ஆவடி, புதுநகர், 4வது தெருவை சார்ந்தவர் புருஷோத்தமன் (55). கட்டிட தொழிலாளி. இவரது தங்கை பிரேமாவதி (35). இவருக்கு காலில் அடிபட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை  புருஷோத்தமன், பிரபாவதியை  பைக்கில் அழைத்துக்கொண்டு செங்குன்றத்தில் உள்ள மருத்துவமனைக்கு புறப்பட்டார்.

இவர்கள் ஆவடி அடுத்த கொள்ளுமேடு, பிரியா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.  அங்கு முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது லாரியின் பக்கவாட்டில் பைக் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில்  புருஷோத்தமன், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  பிரேமாவதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு  பதிவு செய்தனர்.இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சார்ந்த லாரி டிரைவர் மும்மூர்த்தியை (31) கைது செய்தனர்.

Related Stories: