சென்னை: மயிலாப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ₹15 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, சிசிடிவி பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள பல்லக்கு மாநகரில் டாஸ்மாக் கடை (எண்:1002) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும் இதனால், அந்த கடை முன்பு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். தினசரி மதியம் 12 மணிக்கு இந்த கடை திறக்கப்பட்டாலும், காலை 10 மணி முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து, மதுபாட்டில்கள் வாங்கி செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை டாஸ்மாக் கடையின் முன் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடையின் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் ஊழியர் ராஜபாண்டி ஆகியோர் மதியம் 12 மணிக்கு வந்து கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, கல்லா பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த வசூல் பணம் ₹14.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.