நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய சென்றபோது மரத்தில் ஜீப் மோதி விபத்து கைதி, காவல்துறை அதிகாரிகள் காயம்

மூணாறு, பிப். 21: மூணாறு அருகே உள்ள மறையூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பேபி (67) என்பவரை அடிமாலி நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக, அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மறையூர் காவல்துறை அதிகாரிகள் ஜெயக்குமார் (31), அனுப் தேவசியா (36) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். தேவிகுளத்தை சேர்ந்த வர்க்கி ஜீப்பை ஓட்டினார். தேவிகுளம் தொகுதி அலுவலக சாலை வளைவில் திரும்பும்போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக, டிரைவர் ஜீப்பை ஒதுக்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மரத்தில் மோதியது. இந்த விபத்தில் டிரைவர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைதி பேபி ஆகியோருக்கு கை, இடுப்பு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு உடனடியாக மூணாறு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தேவிகுளம் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தேவிகுளம் தொகுதி அலுவலகம் செல்லும் சாலைகளை சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்போவதாக, மாட்டுப்பாட்டி மண்டலா காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சுனி தெரிவித்துள்ளார்.

Related Stories: